Monday, June 8, 2026

சுழலும் சக்கரம்

 நேரத்தை அளவிட கற்றுக்கொள்ளாத காலத்துக்கு முன், இராமாயணம் மற்றும் மஹாபாரதம் காலத்திற்கு முன், இவ்வுலகில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு பயம் இருந்தது.

  • அது மரணம் அல்ல.
  • அது இருள் அல்ல.
  • அது இன்னும் ஆழமான ஒன்று.

அது பிறக்கவில்லை. அது மெதுவாக உருவானது :–

  • இழந்த நேரத்தின் பயத்தில் இருந்து.
  • பல முறை தோல்வியடைந்த கோபத்தில் இருந்து.
  • "ஏன்?" என்ற பதில் இல்லாத கேள்விகளில் இருந்து.

அது குழப்பத்தை உணவாகக் கொண்டு வளர்ந்தது. அது தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் – காலவக்ரன். அதற்கு உருவம் இல்லை. அதற்கு உயிர் இல்லை. ஆனால் அதனிடம் இருந்து தப்புவதற்கு ஒருவருக்கும் வழி இல்லை.

நீ விழிக்கும் போது, சூரியன் இன்று முழு நாளும் எரிக்கிறாரோ இல்லை மறைந்தது விடுமோ என்று தெரியாது. நீ விதை இடும் போது அது வளருமா அல்லது கருகுமா என்று தெரியாது. அந்த பயம் – நிச்சயமின்மை.

இந்த நிச்சயமற்ற பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இதே கதி தான்.

  • ஏன் இது இவ்வளவு நேரம் எடுக்கிறது?
  • ஏன் எல்லாமே ஒரே நேரத்தில் நடக்கிறது?
  • ஏன் எதுவும் மாறவில்லை?

தேவர்களும் தேவேந்திரன் இந்திரனும் இதை உணர ஆரம்பித்தனர். அதுதான் காலவக்ராவின் ஆட்சி. அவன் வலிமை... வன்முறையில் இல்லை. அது நேரத்தை சிதைப்பதில்.

  • பிறந்த குழந்தைகள் வயதை விட கவலையால் முதிர்ந்தனர்.
  • நேரம் நின்றுவிடுமோ என்று பயந்தார் இந்திரன்.
  • பகல் பொழுது சுருங்கிச் சுருங்கி இல்லாமல் ஆகிவிடுமோ என்று பயந்தனர் மக்கள்.

இந்த நிலையில் இந்திரன், அழிக்கும் கடவுளான விஷ்ணுவைச் சந்தித்து, அவருடன் இணைந்து காக்கும் கடவுளான சிவபெருமானிடம் சென்றார். சிவன் அவர்களை கண்டவுடன், சிறிய புன்னகையுடன், 'இந்த நிலை மாறுவதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கான லீலை முன்னரே ஆரம்பமாகிவிட்டது' என்றார். இதைக் கேட்ட பிறகுதான் இந்திரன் பெருமூச்சு விட்டார். விஷ்ணுவிற்கோ இதுதான் நடக்கும் என்று முன்னரே தெரிந்ததைப் போல அவரும் சிறிய புன்னகை செய்தார்.

விஸ்வகர்மா என்பவர் இந்து புராணங்களின் படி தேவர்களின் தலைசிறந்த கலைஞர் மற்றும் பிரபஞ்சத்தின் வடிவமைப்பாளர் ஆவார் (Architect of Universe). இவரை தெய்வீகப் பொறியாளர் என்றும் படைப்பின் தேவன் என்றும் அழைப்பர்.

இலங்கை, துவாரகை, இந்திரப்பிரஸ்தம், எமபுரி ஆகியவை தேவதச்சன் விஸ்வகர்மாவால் வடிவமைத்த சில பிரம்மாண்டமான நகரங்கள் ஆகும். இந்திரனுக்கு வஜ்ராயுதம் வடிவமைத்தவரும் இவரே.

விஸ்வகர்மாவின் மகன் சஞ்சனா சூரியனின் மனைவி ஆவாள். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பம் அதிகரிக்க சஞ்சனா மிகவும் அவதிப்பட்டு தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள்.


விஸ்வகர்மா சூரியனின் சக்தியை குறைக்க முடிவு எடுத்தார். சூரிய சக்தியின் ஒரு பகுதியை எடுத்து மூன்று பொருட்களை வடிவமைத்தார் :–

1) புஷ்பக விமானம் (World's first Aeroplane)

இந்த விமானம், செல்வங்களின் கடவுள் குபேரனுக்காக கொடுக்கப் பட்டது. இது தேவைக் கேற்ற படி பெரிதாகக் கூடிய, தானாக இயங்கும் விமானம் ஆகும்.

குபேரிடம் சண்டையிட்டு இராவணன் இந்த விமானத்தை கைப்பற்றி அவனுக்கான தனிப்பட்ட ஊர்தியாக பயன் படுத்தினான். சீதையை கடத்தும் போதும் இந்த விமானத்தையே பயன் படுத்தினான்.

இராவணனை வீழ்த்திய பிறகு இராமர் இந்த புஷ்பக விமானத்தில் இலங்கையில் இருந்து அயோத்தி வரை திரும்பினார். இது இராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்ற பயணம். இராமர் புஷ்பக விமானத்தை மீண்டும் குபேரனிடம் ஒப்படைத்தார்.

விஸ்வகர்மா → குபேரன் → இராவணன் → இராமர் → குபேரன்

2) திரிசூலம் ψ

சிவனின் அடையாளங்களில் மிக முக்கியமானது திரிசூலம் (Trishula) ஆகும். இது ஒரு சாதாரண ஆயுதம் அல்ல, பிரபஞ்சத்தின் ஆழமான உண்மைகளை குறிக்கும் தெய்வீக சக்தி. அது சிவனின் உருவாக்கம் (Creation), காப்பு (Protection) மற்றும் அழிவு (Destruction) ஆகிய மூன்று சக்திகளின் வடிவம்.

கஜாசுரன், அந்தகாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்ய சிவன் பயன்படுத்திய ஆயுதம் திரிசூலம் ஆகும்.

ஆ!! சூரிய சக்தியின் ஒரு பகுதியில் இருந்து உருவான புஷ்பக விமானம், திரிசூலம் எவ்வளவு சிறப்பு மிக்கவையாக உள்ளன. சற்று பொருங்கள், விஸ்வகர்மா சூரிய சக்தியில் இருந்து மூன்று பொருட்கள் செய்தார் என்று சொன்னேன் அல்லவா? அந்த மூன்றாவது பொருள் முதல் இரண்டை விட அதி சிறப்பு வாய்ந்தது.

இந்த பிரபஞ்சத்தை காலவக்ரனிடமிருந்து இருந்து காப்பாற்ற பிறக்கும் உயரிய சக்தி கொண்ட பிரமாண்ட ஆயுதம் ஆகும். அது விஸ்வகர்மாவின் சிறப்பான படைப்பு. அது தான் சக்கரம். பகவான் விஷ்ணுவின் கையில் காணப்படும் சக்கரம்.

3) சக்கரம்

அது உருவான காலம் முதல் ஒளியின் வேகத்தை விட பல பல மடங்கு வேகமாக சுழன்று கொண்டு உள்ளது. விஸ்வகர்மா அந்த சிறப்பு மிக்க சக்கரத்தை விஷ்ணுவிடம் கொடுக்க அதை அவர் சிவபெருமானிடம் எடுத்துச் சென்றார்.

சிவ பெருமான் சக்கரத்தை பார்த்துவுடன் இரு கண்களையும் மூடி சற்று நேரத்தில் அவரது நெற்றிக் கண்ணை திறந்தார். அதில் இருந்து சூரியனை விட அதிக வெட்பம் கொண்ட அக்னி வெடித்தது. அந்த அக்னி சக்கரத்தில் புகுந்தது. சக்கரத்தின் சுழற்சி வேகம் மேலும் பல மடங்கு அதிகரித்தது. ஆயுதமாக இருந்த சக்கரம் உயிருள்ள சக்கரத்தாழ்வாராக அவதரித்தது.

சுதர்சன சக்கரம் – ஆயுத வடிவம்

சக்கரத்தாழ்வார் – கடவுள் வடிவம்

– இந்த இரண்டும் ஒன்று தான்!

சுதர்சன சக்கரம் காலம், தர்மம், பாதுகாப்பு ஆகிய மூன்றையும் தனது அடையாளமாக கொண்டு இந்த பிரபஞ்சம் நல்லபடியாக செயல் பட உதவும் என்று சிவ பெருமான் கூறினார்.



மதுரை மதனகோபால் கோவில் (சுண்டல் கோவில்) சக்கரத்தாழ்வார் சன்னதி நான் சிறுவனாக இருந்த போது நிறவப்பட்டது. அப்போது நாங்கள் அடிக்கடி அந்த சன்னதியை 108 முறை சுற்றி கும்பிடுவோம். சில சமயம் 1008 முறை சுற்றி வந்தது நினைவுள்ளது.

கயிலாயத்தில் இருந்த அனைவரும் அந்தச் சக்கரத்தின் வேகத்தைப் பார்த்தும், சிவபெருமான் கூறுகின்ற அதன் ஆற்றலைக் கேட்டும் வியந்து நின்றனர். சட்டென்று இந்திரன் குறுக்கிட்டார் – 'இந்தச் சக்கரம் எவ்வாறு காலவக்ரனை வென்று பிரபஞ்சத்தைக் காப்பாற்றும்?

சிவ பெருமான், "அதன் வேலையை அது ஏற்கனவே செய்து முடிந்து விட்டது" என்றார். மேலும், "சுதர்சன சக்கரம் பிறந்த நொடி முதல் இணையற்ற வேகத்தில் சுழன்று இணையற்ற செயல்களை செய்து கொண்டு இருக்கிறது."


இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களின் உள்ளேயும் அவதரித்துள்ளது. அது மனித உடலில் ஏழு சக்தி மையங்களாக மாறின:

  • மூலாதாரம்  -  துணிவு
  • சுவாதிஷ்டானம்  -  உணர்வு
  • மணிபூரகம்  -  சக்தி
  • அணாஹதம்  -  அன்பு
  • விஷுத்தி  -  உண்மை
  • ஆஜ்ஞா  -  ஞானம்
  • சஹஸ்ராரம்  -  இறைவன் இணைப்பு

இந்த ஏழு சக்தி மையங்கள் மனிதர்களுக்குள்ளே இருந்து, காலவக்ரனை எதிர்கொள்ளும் சக்தியைக் கொடுக்கின்றன. அந்தச் சமயம், சக்கரம் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு ஒளி சக்தியிலும் புகுந்து சீரிய செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது. சூரிய ஒளிப்பரப்பு சீர் செய்யப்பட்டதும், காலவக்ரன் என்னும் உருவம் இல்லாத அசுரன் அடியோடு அழிந்தான்.



இதைக் கேட்ட அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி பொங்கியது.

ஒரு மனிதன் தியானம் செய்வதன் மூலம் தன் உள்ளேயுள்ள சக்திகளை விழித்தெடுப்ப முடியும். தமது உடம்பில் நேர்க்கோட்டில் உள்ள ஏழு சக்கரங்களின் சக்தியையும் ஒன்றிணைத்துத் தினம் தியானம் செய்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சக்தி அளவற்றதாக இருக்கும்.

இவ்வாறாக சக்கரத்தின் ஆற்றலை சிவ பெருமான் விளக்கிக் கூறினார்.

சக்கரம் பணிவோடு நன்றி கூறி பகவான் விஷ்ணுவின் கையில் சென்று அமர்ந்தது. "நான் விஷ்ணுவின் கையில் இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரிலும் தேவையான சக்தியைக் கொடுத்து, அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை காலவக்ரன் உருவாவதைத் தடுப்பேன்; இனி ஒருபோதும் காலவக்ரன் வளர விடாமல் பார்த்துக் கொள்வேன்" என்றது.

சக்கரத்தாழ்வார் பகவான் விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் தோன்றி பகவானுக்கு உதவுகிறார். சில அவதாரத்தில் நேரடியாகவும் சில வற்றில் மறைமுகமாகவும் செயல் படுகிறார்.

கோவில்களில் பொதுவாக கடவுள் சிலைகளை பல வடிவங்களில் பார்த்திருப்பீர்கள் – நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம். ஏன் நடனமாடும் கோலத்திலும் இறைவனைப் பார்த்திருக்கிறோம். நம் சக்கரத்தாழ்வார் எந்த வடிவத்தில் இருப்பார் என்று தெரியுமா? ஓடும் வடிவில் ஒரு கால் முன் வைத்து இருப்பார். மாரத்தான் போட்டியகளில் பங்கேற்பார் போல. சில பக்தர்கள் அவர் முன் வைக்கும் கோரிக்கைகளைச் சிறுபொழுதும் வீணாக்காமல், உடனே ஓடிச் சென்று தனது பின்புறம் உள்ள நரசிம்மரிடம் கூறுவது, உடனடியாக அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத்தான்.

அடுத்த முறை கோவிலுக்குச் செல்லும்போது, சக்கரத்தாழ்வாரின் ஓடும் நிலையைக் கண்டு மகிழுங்கள். நாமும் அவரைப் போல் ஓடுவோம், மாரத்தான் போட்டிகளில்!

"இரும்பு சுகமா கையகட்டி உட்கார்ந்தா,

உடைன்ஜி துரும்பா சில்லு சில்லா கொட்டும் பார்!

உடம்பை மதித்துக் கால் எடுத்து வைத்தாலே

இளமை முழுதும் உன்கூடவே ஒட்டும் பார்!!"

(ஆ! மாரத்தான் என்றும் ரஜினி பாட்டு வந்துவிட்டது)

கோவில்களில் சக்கரத்தாழ்வர் பின்புறம் நரசிம்மர் இருப்பார். விஷ்ணு பகவான் நரசிம்மர் அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை ஆயுதம் இல்லாமல் நகங்களால் கிழிந்து அழித்தார். அந்த நரசிம்மரின் உக்கிர சக்தி உடையவர் சக்கரத்தாழ்வார் ஆவார். நரசிம்மர் அவதாரத்தில் சக்கரத்தாழ்வார் நரசிம்மரின் நகமாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இராமர் அவதாரத்தில் அவரது காலணிகளை வைத்து பூஜை செய்து ஆட்சி செய்த பரதன் சக்கரத்தாழ்வார் ஆவார். இன்னும் விஷ்ணுவின் எல்லா அவதாரத்திலும் சக்கரத்தாழ்வார் தோன்றி உள்ளார்.

விஷ்ணுவின் அவதாரத்தில் மட்டும் இல்லாமல் இன்னும் நம் அனைவரிடத்திலும் சக்கரத்தாழ்வார் இருக்கிறார் (ஏழு சக்தி மையங்களாக).

என்னுடைய இஷ்ட தெய்வமும் இவரே ஆவார். நான் எந்தக் கடவுளின் முன் நின்று பிரார்த்தனை செய்தாலும், கண்களை மூடியவுடன் என் புருவங்களுக்கு நடுவே (ஆக்ஞா சக்கரம்) சக்கரம் சுழலும். அது என் உடம்பில் உள்ள ஏழு சக்கரங்களின் சக்தியையும் மேலே எழுப்பி, அந்த ஆற்றலை ஒன்றுதிரட்டும். அந்தச் சக்தியை அப்படியே நெற்றிப்பொட்டுக்குக் கொண்டு வரும் தியானத்தை நான் சிறு வயதிலிருந்தே பழகி வருகிறேன். இதனால் எனக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நீங்களும் இதை முயன்று பாருங்கள்.

பின் குறிப்பு:

★ சக்கரத்தாழ்வார்க்கான முக்கிய கோவில்கள் :

  • ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமான் கோவில்
  • திருப்பதி வெங்கடேச பெருமான் கோவில்
  • திருமோகூர் காளமேகப் பெருமான் கோவில்
  • சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்

★ சுதர்சன ஹோமம் என்பது சுதர்சன சக்கரம்

(சக்கரத்தாழ்வார்) அவர்களை பிரதானமாக வைத்து செய்யப்படும் மிக சக்தி வாய்ந்த யாகம்.

"ஓம் நமோ பகவதே மகா சுதர்சணாய தீர ஜ்வாலாய"